சாயும் பைஸா கோபுரம்

உலகத்தில் பிரபல்யமாகக் காணப்படும் விடயங்கள் மக்களால், சந்ததி சந்ததியாக மிகக் கரிசணையுடன் பார்க்கப்படும். இத்தாலியிலுள்ள பைஸா நகரத்தில் அமைந்துள்ள சாயும் கோபுரத்தினை அறிந்திராதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த நகரத்தின் வரலாறு மிகவும் சிறப்பும், உயர்வுமுடையதை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். சாயும் பைஸா கோபுரமும் ஒரு ஆச்சரியமான விடயமென்றால் மறுப்பதற்கில்லை.
கோபுரம் முழுக்க வெள்ளைப்பளிங்கால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, கோபுர சுவரின் தடிப்பு நான்கு (4) மீற்றர் உடையதாகவும், எட்டு மாடிகளையும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இதன் உயரம் 54.5 மீற்றர்கள் ஆகும். இது சாதரணமாக 15 மாடிக்கட்டடமொன்றின் உயரமாகும். அத்தோடு இதன் சுவரினூடாக 300 படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் கோபுர உச்சி வரைக்கும் பரந்துள்ளது. இப்படிகள் மூலமாக ஏறி, கோபுர உச்சியை அடைந்தால், அங்கு ஆறு மைல்கள் தொலைவிலுள்ள நகரத்தினதும், கடற்கரையினதும் அற்புதமான அழகிய காட்சிகள் விழிக்கு விருந்தாகும்.
கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை புவியை நோக்கி விடுவித்தால், கோபுரத்திலிருந்து 5 மீற்றர் தூரத்தில் விழுமாம். எது இவ்வாறு கோபுரத்தைச் சாயச் செய்தது? யாருக்கும் தெரியாது. ஆனால் இது நிர்மாணிக்கப்படுகையில் நிச்சயமாக நிலைக்குத்தாக, நேராகவே நிர்மாணிக்கப்பட்டதற்கு உறுதியான சான்றுகள் உள்ளதாம்.
கோபுரமானது, கத்தோலிக்காரர்களின் மணிக்கோபுரமாகவே கட்டப்பட்டது. இதன் நிர்மாணப் பணிகள் 1194ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1350ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது. கோபுரத்தின் அத்திவாரம் (அடித்தளம்) மண்ணினால் கட்டப்பட்டதாலேயே இது சாயத்தொடங்கியதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், இச்சாயும் செயன்முறை திடீரென நடைபெறவில்லை. கோபுரத்தின் மூன்று மாடிகள் கட்டப்பட்டு முடிந்த நிலையிலேயே சாயத் தொடங்கியுள்ளது. இதனால் அதன் நிர்மாணப்பணிகள் சற்று மாற்றப்பட்டு முடக்கிவிடப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் கோபுரமானது 0.3 மீற்றர் சாய்ந்துள்ளதாக துணியப்பட்டுள்ளது. சில பொறியியலாளர்கள் இதனை "விழும் கோபுரம்" (Falling Tower) என்றே அழைக்க வேண்டும் என்கின்றார்கள். ஏனென்றால் ஒரு நாளில் இது நிச்சயமாக சாய்ந்து விழுந்து நொருங்கிவிடும் என்பதனாலாகும் எனச் சொல்லப்படுகின்றது.
உங்களுக்குத் தெரியுமா? பைஸா நகரில் பிறந்த கலிலியோ, இந்தக் கோபுரத்திலிருந்தே, பொருட்களை கீழே விழச் செய்வதன் மூலம் பொருட்கூட்டங்களின் வேகத்தின் மாற்றங்களை ஆராய்ந்து கண்டறிந்தாராம்.
